தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

கடவுளின் விலை - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-4)

Thursday, September 25, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும் முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்)

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).

கடவுளின் விலை - (நான் யார் தேடல் - 4)

நான் யார்?

எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை

தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்

எனக்குமேல்
எல்லா மனிதர்களும்
உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி

நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி

புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்

புலன் அடக்கி
உள்மன உட்கருவில்
உணரத்துடித்த ஆன்மீகம்

புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்

அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?

தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்

உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்

நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்

மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக

தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?

நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை

வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து

வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்

விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று - இது தான்
கடவுளின் விலை

விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்

கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை

கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி

நானா?, கடவுளா?
யார் முந்தியவர்
முதலில் தேடுவது
யாரை?

கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ

நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ

எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி

நான் யார்
விடைதெரியாது விட்டிலாய் திறிந்தவளுக்கு
விளக்காய் ஒரு சுடர்

அந்த சுடர்.....?

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- காதல்(காம) ரீங்காரம் -நான் யார் தேடல் -5

கவிதை விளக்கம்: தியானம் தவம் இவற்றில் மூழ்கி முக்தியடைந்து வெறுத்து மீண்டுவந்தவள், அறிவியல் ரீதியாக ஆராய்ச்சிகள் செய்தேன். அறிவியலில் எங்குமே என்னையும் கடவுளையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. கிறிஸ்துவம், இந்துத்துவம் இஸ்லாமியம், புத்தம் என எல்லா மதங்களையும் கற்று அங்கும் தேடி பார்த்தேன் நான்யார்? கடவுள் யார்?

மதங்கள் என்னையும் கடவுளையும் அறிய விலை கேட்டது. அதாவது நிறைய பணம் தரவேண்டும். நாத்திகனாக இருந்தால் கூட பணத்தை அள்ளி வீசுபவரை மதங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளும். அல்லது பற்று அதாவது எல்லோரையும் கவரக்கூடிய பற்று, எல்லாவற்றிற்கும் அடிமையாககூடிய பற்று இந்த மூன்றும் தான் கடவுளின் விலை.

இன்று எல்லோரையும் வசியப்படுத்தும் கலையை பெற்ற சிலர், சாமியார்கள் என்ற பெயரில் நான் தான் கடவுள் என சொல்லிக்கொண்டு ஊரை, உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அலை, இந்தயோகம், முக்திப் பயிற்சி என மனவசீகரம் என்ற பற்றில் மனதை அடிமையாகவே அடக்கிவிடுகிறார்கள். புதியதை சொல்லி தருவதாக சொல்லி பற்றை பகிரங்கமாக பிடுங்குகிறார்கள்.

பணக்காரியாக இருக்க வேண்டும், அல்லது பற்றுக்கு அடிமையாக இருக்கவேண்டும். இந்த இரண்டையுமே வெறுத்தவள் வெற்று வாழ்க்கையோடு மீண்டும் விடைதெரியாதவளானேன். ஆனால் விடை சொல்லித்தர என் வாழ்க்கையிலும் ஒரு பற்று திருப்புமுனையாக வந்தது. அந்த பற்று தெளிவாகவே வாழ்க்கை ஞானத்தை புரியவைத்தது.

அந்த திருப்புமுனை... அடுத்த பதிப்பில்....

Read more...

ஆன்மவலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-3)

Monday, September 15, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்

வாழ்க்கை வலி(1)
மனவலி மரணவலி(2)

ஆன்மவலி - (நான் யார் தேடல் - 3)

மறுபிறவி தேடல்
மனவலியை மிஞ்சிய
ஒரு மரணவலி

தவம், தியானம் மன ஒருமுகம்
ஒருங்கே கோர்த்தே
சிந்தனை சிறகை விரித்தேன்
சிவலோகம் எனும் பரலோகம் நொக்கி

பறக்க பறக்க முற்றியது பாசம்
பரவுலக வாழ்க்கைமீது

சிந்தனை சிறகடித்து
சுரந்திர சூட்சமங்களை சுவாசிக்கும் ஆர்வம்
வலி மாய்ந்தது போல ஒரு இன்பம்

பற்று பாவ
பங்கீட்டை தாண்டி
இனனும் பறந்தேன் வேகமாக
பரம்பொருள் ரகசியம் தேடி

எல்லை நெருங்கிவிட்ட ஆனந்தம்
கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் பதட்டம்
கேள்விகளை ஒத்திகை
பார்த்துக்கொண்டேன் ஒருமுறைகூட

அந்தோ...
சுதந்திர சுற்றுகளை
சுருட்டி முடக்கிய மாயையினின்று
விட்டு பிரிந்ததில்
ஒடிந்தது என் சிந்தனை சிறகுகள்.

இங்கு கடவுளை தேடுவது ஒருபுறம்
முதலில் சிறகொடிந்த நான் எங்கே?

நானே இல்லை என்றால்
நான் எப்படி தேடுவது கடவுளை?

நானும் இல்லை கடவுளும் இல்லை
இனி எங்கே நேருக்குநேர் சந்திப்பு

ஒடிந்தது சிந்தனை சிறகுகள் மட்டுமா
என் பரம்பொருள் தேடலும்.

ஒன்றும் அறியாதவள்
எதையோ அறிந்தவளாய் மீண்டேன்
வாழ்க்கை வலிக்கே.

உடல்வலி, உள்ளவலி -இபபோது
எனக்குள் ஆன்ம வலியும்

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

சென்று, கண்டவளுக்கு
விண்டுவதில் குழப்பம்
பெருஞ்சூனியத்தை எப்படி
பேரானந்தம் என்றார்கள்?

நான் போன இடம் தவறா
போன முறை தவறா - இல்லை
போகவே இல்லையா?

அழுது தீர்க்க உடல்வலி
புலம்பி தீர்க்க மனவலி
புதிராய் தவிக்க ஆன்ம வலியோ?

வலிகள் மட்டுமே வாழ்க்கையானால்
வழிவேண்டும் வாழ -அல்லது
வரலாறாய் மாழ

கேலியான நானே
கேள்வியானேன்

நான் யார்?

முடிவுறா வலியோடு
அழுதே முடித்தேன் முதல் சுற்றை.

முடிவிலும் எனக்குள் தொடங்கிய தேடல்

நான் யார்?

தொடர்ச்சிஅடுத்த பதிப்பில்:- நான்யார்? கடவுள் யார்? (நான் யார் தேடல் - 4)

கவிதை விளக்கம்: மரணவாசல் வரை சென்ற நான் மறுபிறவி பயத்தில் தியானம், பக்தி, தவம் என தீவிர ஆன்மீக பாதைக்குள் நுழைந்தேன். ஆன்மீக மகான்கள், மகரிஷிகள் தேடிய ஆன்ம ஞானத்தை நானும் தேடினேன். மனதை ஒருங்கு படுத்தி பற்று பாவங்களை விட்டு முக்திக்கு போனேன். முக்தியும் அடைந்தேன். ஆனால் அந்த முக்தியில் நான் அறிந்த ஆன்மஞானத்தை புரிந்துகொள்வதில் எனக்கு குழபபம்.

எல்லா ஆன்மீக ஞானிகளும், மகரிஷிகளும் ஆன்மீக ஞானத்தை பேரானந்தம் என்கிறார்கள். ஆனால் நான் அறிந்ததோ பெரும் சூன்யம்( ஒன்றுமேஇல்லை). அந்த பெரும் சூன்யத்தில் நானே தொலைந்துவிடுகிறேன். நானே தொலைந்துவிட்டால் நான் எப்படி கடவுளை பேட்டி எடுப்பது?. அதற்கு மேல் எல்லையும் இல்லை. பின் எஙகே செல்வது? பேரானந்தம் என சொன்ன ஆன்மீக ஞானிகளும் வந்த இறுதி எல்லை இதுவாகதான் இருக்கவேண்டும். ஏனெனில் இதற்குமேல் எல்லையே இல்லையே. ஒன்றுமில்லை என்றால் அதற்குமேல் என்ன இருக்கிறது.

ஒன்றுமே அறியாதவள் எதோ ஒன்றை அறிந்த புரிதலோடு மட்டும் பக்தி, தியானம், ஆன்மஞானத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வலிகள் நிறைந்த சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினேன். ஆனாலும் எனக்குள் மீண்டும் ஒரு புதுதேடல் முதலில் நான் யார் என்பதை தெரிந்துகொள்வோம். என நான் யார் என்பதை தேடும் பாதையில் பயணத்தை தொடங்கினேன்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் நான் யார் என்பதை தேடும் பயணங்கள்...

Read more...

கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்!

Sunday, September 14, 2008

கடவுள் துகள் உட்பட விபரீத ஆரய்ச்சிகளை வரவேற்கும் அறிவியல் விரும்பிகளுக்கும், உணமையை அறிந்துகொள்ள விரும்பும் எதார்த்தவாதிகளுக்கும் ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது? என்ற பதிவிற்கு திரு. கையேடு அவர்கள் அளித்த பின்னூட்ட கேள்விகளின் அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்துகிறோம்.

//காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் உயிர்களுக்கு இருக்கிறது, மனிதனுக்கு இன்னும் இருக்கிறதா?//

அதை தான் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவிட்டு, செயற்கை தகவமைப்புகளை உருவாக்கிக்கொண்டு இயற்கையோடு பலப்பரீட்சை பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.

இன்று எயிட்ஸ் நோய் தான் மனித குலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.

// இது உங்கள் அனுமானமே, இவ்வனுமானத்துடன் விஞ்ஞானம் நிச்சயம் கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை.தொடர்ந்து அந்தப் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.//

// ஒருவேளை உங்கள் கூற்றுப் படி நிகழ வாய்ப்பிருந்தாலும், உயிர்களுக்கான தகவமைப்புகள் பெரும்பாலும் பல தலைமுறைகள் ஆகும்.//

இப்படி நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கும் அறிவியலின் உழைப்பை தேவையில்லை என்றோ வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் புதிய கிருமிகளை உருவாக்கிப்பரப்பும் அறிவியலை தான் வேண்டாம் என்கிறோம்.

உதாரணமாக அமெரிக்காக உட்பட பல வல்லரசு நாடுகளில் இன்றுகூட நோய்கிருமி ஆயுத ஆராய்ச்சிகள்(விபரீத அறிவியல்) பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தொகையும் நோய்எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு உங்கள் கூற்றே சான்று. எல்லா நாடுகளும் ராணுவத்திற்கு அதிகம் பணம் ஒதுக்குவதாக நீஙக்ள் குறிப்பிடுவது.

// உங்கள் பார்வையில் பேராபத்து என்பதின் அளவென்ன?//

மனித உயிரையும், உயிரின சரித்திரத்தையும் பணையம் வைத்து ஆய்வுகள் செய்கிறார்களே அதை தான் பேராபத்து என்கிறோம். உதாரணமாக தற்போதைய கடவுள் துகள் ஆய்வு, அணுஆயுது ஆய்வு மற்றும் சேகரிப்பு, நோய்கிருமி ஆயுதங்கள் மற்றும் கண்டுபிடிப்பு சேகரிப்புகள், போன்றவை.

பேராபத்தின் அளவு என்ன என கேட்டால் மனிதனால் எதிர்கொள்ள முடியாத ஆபத்துகள் அனைத்துமே பேராபத்துகள் தான்.

//அனுபவித்த பேராபத்துக்களைப் பற்றி முன்கூட்டுயே அறிந்து கொண்டு மனித குலத்தைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் நிச்சயமாக திறனுடையதே.//

இயற்கையான பேராபத்துக்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதிலிருந்து தப்பித்து ஓடவே இத்தனை காலம் பிடித்திருக்கிறது என்றால் இன்று அறிவியல் படைத்துவைத்துள்ள பேராபத்துகளை எப்படி எதிர்கொள்ள போகிறோம்? எங்கே தப்பித்து ஓடப்போகிறோம்?

உதாரணமாக முன்பெல்லாம் போர் என்றால் எல்லையில் ராணுவம் மட்டுமே மோதிக்கொள்ளும். நாம் நம்வீட்டில் பாதுகாப்பாக இருந்து நிதி உதவி மட்டும் செய்தால் போதும். ஆனால் அணுஆயுதம் மற்றும் கிருமிஆயுதம், பூமியில் சூரியனில் உள்ள அளவு போன்ற வெப்பத்தை ஏற்படுத்துதல்(இது இயலுமா என்பது சர்சசைக்கு உரியது. ஆனால் அதை சாதிக்கப்போகறேன் என்ற ஆய்வில் உயிரின சரித்திரமே முடிந்துவிட்டாலோ?) இப்படி பேராபத்துகள் வருகிறது என தெரிந்தால் எங்கே தப்பித்து ஓடுவீர்கள்? அதற்காக தான் நிலவில் பிளாட் வாங்கி வைத்திருக்கிறாகளா?

நாங்கள் வலியுருத்துவது இயற்கை சீற்றங்களுக்கு தற்காப்பு கண்டுபிடிப்பதை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் கண்டுபிடிப்புகளே இயற்கையை மிஞ்சும் பேராபத்துகள் ஆகிவிடக்கூடாது. மேலும் அதற்காக பசிபட்டினியில் மனிதகுல்ம் உள்ள தற்போதைய நிலையில் பணத்தை வீணடிக்க கூடாது என்பது தான்.

// உலகெங்கிலும் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் பணம் பலமடங்கு அதிகம்.//

100 % உண்மை தான். இது குறித்து அறிவகம் கட்டுரை தொடரில் விரிவாக எழுதியுள்ளேன். இங்கு கவனிக்க வேண்டியது நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் பெருபாண்மை நிதி ராணுவ வீரர்களின் நலனுக்கோ, பயிற்சிக்கோ, மருத்துவம் சுகாதாரத்திற்கோ ஒதுக்கப்படுவது இல்லை. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கும், அதை பதுக்கி பாதுகாத்து வைப்பதற்கும் தான் செலவிடப்படுகிறது. உடனே அரசியலை கேள்வி கேளுங்கள் என்காதீர்கள். இந்த கண்டுடிபிடிப்புகளை எல்லாம நிகழ்த்துவது அறிவியலாளர்கள் தானே.

இந்தியா உட்பட பல ஏழை நாடுகளில் ராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் இனனொரு மர்மத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். வேறு எந்த துறையில் இருந்தும் நிதியை கொள்ளையடித்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றாவது ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும். ஆனால் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துவிடலாம். மக்கள் கோட்டால் ஒரே பதில் ராணுவ ரகசியம் வெளியில் சொன்னால் நாட்டிற்கு ஆபத்தாம்.

// பூவி வெடித்துவிடும் என்றால் அதற்குமேல் எதிர்கொள்ள ஒன்றுமேயில்லை. எதை? எங்கிருந்து எதிர்கொள்வது? :)

மேற்குலக விஞ்ஞானத்திற்கு தனது வளர்ச்சியின் திசையின் எல்லை எது எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் என்றால், இந்தியாவிற்கு தற்போது எந்ததிசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது //

மிக சரியாக அருமையாக சொல்லியுள்ளீர்கள். இங்கு தங்களுக்கு சாதகமான பதிலுக்கு மட்டும் பாராட்டுகிரீகள் என்ற எண்ணம் வரக்கூடாது. உண்மையை யார் எங்கு, எப்படி சொன்னாலும் ஏற்றுக்கொள்வது தான் அறிவுடமை. அதில் எதற்கு வாத பிடிவாதம் வேண்டும். வாதத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால் இறுதியில் உண்மையில் ஒன்றுபடுவது தான் அறிவுடமை. அந்த விடயத்தில் மேற்சொன்ன உங்கள் கருத்துண்மையுடன் நாங்கள் உடன்படுகிறோம்.

// அறிவியலை எதிர்ப்பதற்காக (அல்லது தங்கள் பார்வையில் தேவையற்ற அறிவியலை எதிர்பதற்காக), ஏழ்மை, பசி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை. ஒரு ஏழை ஏழையாக இருப்பதற்கு அறிவியல் காரணமல்ல.//

அன்பரே இங்கு தான நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்வேண்டும். இந்த அறிவியலுக்கான நிதி எங்கிருந்து வந்தது? நீங்களும் நானும் கடையில் வாங்கும் அதே உணவு மற்றும் அத்தியாவிச பொருட்களை தான் ஒரு வேளை சோற்றுக்குகூட வழியில்லாத ஏழைகளும் வாங்குகிறார்கள். அப்போது பொருளில் வரி, லாபம் உட்பட அனைத்திற்கும் சேர்த்து தான் விலை கொடுக்கிறோம்.

 பணக்காரனுக்கு தான் பேனா 10 ரூபாய் ஏழைக்கு 5 ரூபாய் என்றா கடையில் விற்கிறார்கள். இங்கு ரேஷன் கடைகளை பற்றி குறிப்பிட முன்வரலாம். எல்லா நாடிலும் எல்லா மாநிலத்திலும் ரேசன் கடைகளில் எல்லா அடிப்படை பொருட்களும் கிடைக்கிறதா? ரேச்ன பொருட்களை வைத்து மட்டும் ஏழை உணவு உண்டுவிடமுடியுமா?

ஏழையும் பணக்காரணும் சேர்ந்து தானே அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். அதுவும் சரிசமமாக. இங்கு பணக்காரர் வருமான வரி கட்டுகிறான் ஏழை கட்டுகிரானா? என கேட்கலாம். பணக்காரர் வருமான வரி கட்டுவதே ஏழைகளிடம் தங்கள் பொருட்களை விற்று பெற்ற வருமானத்தில் தானே. அவர்களுக்கு வருமானம் வரி கட்டும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது?

பணக்காரர் வருமானவரியை நேரடியாக கட்டுகிறார்கள். ஏழைகள் பணக்காரரிடம் கொடுத்து கட்டுகிறார்கள் அவ்வளவே.

சரி இந்தியாவையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இன்று பல அடிப்படை தேவைகளுக்கு நிதியில்லாத போது கடவுள் துகள் ஆராய்ச்சிக்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?

அதே போல ஆப்பிக்கநாடுகளின் ஏழைகளுக்கும். கடவுள் துகள், அணுஆயுதம் போன்ற விபரீத ஆய்வுகளுக்கும் என்ன சம்மந்தம் என தோன்றலாம். அதற்கு தான் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல், உலகவங்கியில் இருந்து கடன் கொடுத்தல், சர்வதேச ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அவர்கள் நிர்ணயித்த விலைக்கு பொருளை விற்று கொள்ளையடிக்கிறார்களே. அரசியல் என்ற மிகப்பெரிய வியாபாரத்தில் அறிவியலுக்கு மட்டும் நீதி நேர்மையுடனும், மனசாட்சியோடும் எதையும் எதிர்பார்க்காமல் நிதிஒதுக்கிவிடுவார்களா?

இது குறித்து தகுந்த ஆதாரங்களை சேகரித்து வருகிறேன். ஓரிரு தினத்தில் திரு. வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலாக இடுகிறேன்.

// இறுதியாக இதற்கெல்லாம் குற்றம் சாட்டவேண்டியது அறிவியலை அல்ல அரசியலை என்ற தங்களின் கேள்விக்கான பதில்//

விபரீத ஆராய்ச்சிகளுக்கான விடயத்தில் அரசியல்வாதிகள் அறிவியலாளர்களை வற்புறுத்துகிறார்களா? அல்லது அறிவியலாளர்கள் அரசியல்வாதிகளை ஏமாற்றுகிறார்களா? அல்லது கூட்டுகளாவாணிகளா?(திருடர்களா) என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அரசியல்வாதிகள் வேண்டுமானால் வியாபாரிகளாக இருக்கலாம். ஆனால் அறிவியலாளர்கள் விபரீத ஆராய்ச்சிகளின் விளைவுகளை தெரியாதவர்களா? உலகின் எதார்த்த நிலையை தெரியாதவர்களா? அரசியல்வாதிகள் நிர்பந்தித்தால் எதைவேண்டுமானாலும் கண்டுபிடிப்பார்கள் என்றால் அவர்களிடம் எங்கே அறம் இருக்கிறது.

தங்கள் கண்டுபிடிப்புகள் தான் பெரிது என்று அரசியல்வாதிகளையே பணியவைத்து விபரீத ஆராய்ச்சிகளுக்கு நிதிபிடுங்குகிறார்கள் என்றால் யார் மிகப்பெரிய சுயநலவாதிகள்?

ஏன் அறிவியலை கேள்வி கேட்கக்கூடாது பதிப்பின் கருவே இது தான்

ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

இன்னும் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்....

Read more...

ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை. இந்த பதிப்பில் விவாதிக்க வந்த பலபேர் அறிவியலுக்கு எதிரான பதிவாகவே பார்த்தார்களே தவிர, ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது என சிந்திக்கவில்லை.

சிலர் பதிவே அறிவியலுக்கு எதிரானது என்ற கோணத்திலேயே தங்கள் விவாதங்களை வைக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால். கடவுளை பற்றி கேள்வி கேட்டால உடனே அவனை நாத்திகன் என்றும். ஆன்மிகத்தை பற்றி கேள்வி கேட்டால் உடனே அவன் மதவாதி என்றும். அறிவியலை பற்றி கேள்வி கேட்டாலே அவன் ஒரு பிற்போக்குவாதி என்றும் முடிவு கட்டுவது போல் உள்ளது.

பதிவின் மைய கருதத்து இது தான்

// கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா? சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன? //

ஆனால் பெரும்பாலானோர் கேட்டது தொலைகாட்சி, செயற்கை கோள், செல்போன், இணையம் அணுசக்தி இதெல்லாம் வந்திருக்குமா? என்று தான்.

நாங்கள் பயனுள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை குறையோ குற்றமோ சொல்லவில்லை. அதை பதிவிலேயே தெளிவாக வலியுருத்தியுள்ளோம். ஆனால் பயனற்ற விபரீத ஆராய்ச்சிகளை தான் யோசிக்க சொல்கிறோம். அதுவும் உலகில் 70 சதவீதம் மக்களை பட்டினிபோட்டுவிட்டு தேவையற்ற ஆராய்ச்சிகள் தேவையா என கேட்கிறோம்.

பலரும் பதிவை அறிவியல் ஆராய்ச்சிக்கு எதாரானதாகவே வாதிட்டார்களே தவிர பசி பட்டினியால் சாகும் சக மனிதர்களை பற்றி ஆதங்கம் கூட படவில்லையே ஏன்?

இங்கு பதிவர் திரு. ஆ. ஞான சேகரன், திரு.வடுவவூர் குமார் இவர்கள் மட்டும் பசிபட்டினி பற்றி கொஞ்சம் தொட்டுப்பார்த்தார்கள்.

அவர்கள் சொன்னது இது தான்.

// பசி பட்டினி இவை எல்லா காலத்திலும் இருக்க தான் செய்கிறது. அதே போல அறிவியல் வளர்ச்சியும் ஒருபுறம் இருக்க தான் செய்கிறது. அதற்காக பசி பட்டினியை காரணம் காட்டி அறிவியல் ஆராய்ச்சிகளை நிறுத்தகூடாது என்றார்கள். அப்படி நிறுத்தியிருந்தால் இத்தனை நவீனங்கள் வந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.//

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

இந்த கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரும் சாதனையாக பெருமையாக பேசும் நாம்., இதே காலத்தில் தினமும் பலகோடி சக மனிதர்கள் ஒரு வேளை சோற்றுக்கூட வழியில்லாமல் செத்துப்பிழைக்கும் வெக்கக்கேட்டை விவாதிக்க ஏன் முன்வருவதில்லை.

ஒரு நாய்குட்டியே ஒருவேளை உணவு இன்றி பட்டினி கிடப்பதை கண்டு நொடிந்துவிடும் மனித மனங்கள், எப்படி ஒருகோடி குழந்தைகள் உணவின்றி உறங்கும் கொடுமையை ஜீரணிக்கின்றன. - இது தான் நான் கானும் மிகப்பெரிய அதிசயம்.

இன்று அறிவியல் ஒரளவு தன்னிறைவு பெற்றுவிட்டது. ஆனால் மனிதகுலத்தின் அடிப்படை தேவைகள் தன்னிறைவு அடைவது எப்போது?

சரி இந்த ஆதங்கம் ஒருபுறம் இருக்கட்டும். அதை தான் விவாதிக்க ஒருவரும் முன்வருவதில்லையே.

அறிவியல் விவாதத்தற்கே போவோம்

தொழில்நுட்பங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் நிறுத்தியிருந்தால் கோவை நகரமும் ஜப்பானும் வளர்ந்திருக்குமா என திரு. கோவை சிபியும், திரு. கையேடு பதிவரும் கேட்டிருந்தார்கள்.

தொழில் நுடபத்தை கற்றுக்கொள்வதையும், பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதையும் தவறு என நாங்கள் சொல்லவில்லை.

கோவையின் வளர்ச்சியும், ஜப்பானின் வளர்ச்சியும் பெருமையாகதான் இருக்கிறது. அதே நேரத்தில் கோவையை அழித்ததும் ஜப்பானை அழித்ததும் விபரீத ஆராய்ச்சிகள் என்பதை மறுக்கமுடியுமா?

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

அதே ஜப்பான் பயனுள்ள ஆய்வுகளையும் பயனுள்ள தொழில்நுட்பங்களையும் படிக்காமல், விபரீத ஆய்வையும், தேவையற்ற படிப்பையும் மேற்கொண்டிருந்தால் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியுமா?

அடுத்து திரு. தருமி அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்.

// இந்தப் பதிவு எழுப்பும் கேள்வி மிகவும் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. தலைப்பே தவறு என்று நினைக்கிறேன். அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான்.//

கேள்வியும் & பதிலும் தான் அறிவியல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அறிவியல் துறையை ஏன் கேள்வி கேட்க கூடாது? அதுதானே தலைப்பு.

எப்படி ஆன்மீகத்துக்குள் மதவாதம் புகுந்துவிட்டால் ஆன்மீகம் நம்பகத்தன்மை அற்றுப்போகிறதோ, அதே போல அறிவியலுக்குள் அரசியல் நுழைந்துவிட்டால் அதை மட்டும் எப்படி நம்புவது?

அமேரிக்காவும், ரஷ்யாவும் நிலவுக்கு போனார்கள். உடனே உலகின் ஒவ்வொரு நாடுகளும் பின்னாடியே ஒவ்வொன்றாக நிலவுக்கு போயின. அதே போல ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால் உடனே அடுத்த நாடுகள் அணுகுண்டு தயாரித்து விடுகின்றன. இதெல்லாம் எதற்கு? விண்வெளிக்கு போகும் தொழில்நுட்பம் உனக்கு மட்டும் தான் தெரியுமா? எனக்கும் தான் தெரியும் என பெருமைபட்டுக்கொள்ளவும்., அணுகுண்டு தயாரிக்க உனக்கு மட்டும் தான் தெரியுமா எனக்கும் தெரியும் என பயமுறுத்தவும் தான்.

அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பியதிலேயே போட்டியும் நம்பதன்மையின்மையும் வந்துவிட்டது. உண்மையில் முதலில் அமேரிக்கா நிலவுக்கு அனுப்பிய நீலம் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணமே இன்னும் நம்பக தன்மையின்மையும், விவாதத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. (அது ஒரு தனி கதை)

சமீபத்தில் அமெரிக்க செயற்கைகோள் செயல்யிழந்து விட்டதாகவும் அதை ஏவுகனை தாக்கி ராணுவம் அழிப்பதாகவும் அமேரிக்கா அறிவித்தது. உடனே ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அமேரிக்கா விண்வெளி போருக்கு ஒத்திகை பார்ப்பதாக கண்டித்தனர். இப்படி அறிவியலுக்குள் அரசியல் போட்டி பொறாமைகளும், வீணான கவுரவ- பெருமைகளும் வந்துவிட்டது. இப்போது அறிவியலை எப்படி நம்புவது?

இங்கு இன்னொரு எதார்த்த கேள்வி வரலாம்.

சர்வதேச விண்வெளி மையம் என்பதும், சர்வதேச ஆய்வு கூடம் என்பதும் எல்லா நாட்டு உறுப்பினர்களையும் கொண்டது. இதல் அரசியல் இல்லை. எனவே இதை நம்பலாம் என் எதார்த்த எண்ணங்கள் மனதுள் வரும்.

உலகில் பெரும்பாண்மை நாடுகள் உருப்பினர்களாக உள்ள ஐ.நா சபையையும் அதன் நடுநிலைமையையும் ஏன் நம்புவதில்லை?

இதில் உறுப்பினர்களாக உள்ள அரசியல்வாதிகள் தானே இந்த அறிவியல் ஆய்வுக்கும் நிதி ஒதுக்குகிறார்கள்?

ஐ. நா சபை ஒரு பொதுவான அமைப்பு என்றாலும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உலகுக்கு பகிரங்கமாகவே தெரியும்.

அதே அரசியல்வாதிகள் கட்டுப்பாடில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான அமைப்புகளின் நம்பக தன்மையை மட்டும் ஏன் கேள்வி கேட்க கூடாது?

அறிவியல் என்றாலே கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல கடமைபட்ட ஒரு துறை தானே.

அப்படியானால் அறிவியல் துறையையே முடக்க சொல்கிரீர்களா என்ற விதண்டாவாத கேள்விகளுக்கு நாங்கள் பதில்சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் சொல்வது என்னவென்றால் ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

திரு. கையேடு அவர்கள்

விண்வெளி ஆய்வையும் அணுகுண்டு சோதனையையும் மற்றவர்களை போல் நாமும் செய்து காட்டுவதை பெரு¬மாக நினைக்கிறோம். அதே சமயத்தில் மற்றவர்களை போல உணவு, உடை, குடிநீர், சுகாதாரம், கல்வி மருத்துவம் இந்த துறைகளில் எல்லாம் அவர்களுக்கு நிகராக முன்னேற வேண்டும் என நினைக்கிறோமா? இந்த முன்னேற்றத்தை காட்டிலும் விபரீத ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்தை தானே பெருமையாக நினைக்கிறோம். அதை ஏன் என கேள்வி கேட்க கூடாதா?

அப்படியானால் அறிவியல் சுகபோகங்களை அனுபவிக்கும் 30 சதவீதம் மக்களை தவிர மற்ற மனிதர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா? பட்டினியிலேயே சாகவேண்டும் என்பது அவர்கள் தலை எழுத்தா?

இங்கு எனது கேள்வி இது தான். 30 சதவீதம் பேர் அறிவியலின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு போங்கள். ஆனால் ஏற்கனவே வெந்து நொந்து நூலாகியுள்ள் ஏழைகளை சுரண்டி தான் நீங்கள் கடவுள் துகளையும் விண்வெளியையும் கண்டுபிடிக்க வேண்டுமா?

அறிவியலாளர்களே அரசியல்வாதிகளே, ஆன்மீகவாதிகளே, பிரமாண்ட அறிவியல் ஆராய்ச்சிகள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என நினைக்கும் எதார்த்தவாதிகளே, நீங்கள் எப்போது தான் ஏழையின் பக்கம் திரும்புவீர்கள்?

60 ஆயிரம் கோடி என்ன 600 லட்சம் கோடி கோடியே என எத்தனை வேண்டுமானாலும் செலவழித்துவிட்டு போங்கள். உங்கள் அறிவியலின் எல்லை முடியும் வரை காய்ந்த வயிறுடனும், வற்றிபோன தோலுடனும். பட்டினியாகவே காத்துக்கிடக்கிறோம். எல்லை முடிந்த பின்பாவது எங்கள் பக்கம் கொஞ்சம் கருணை காட்டுவீர்களா?

இது தான் ஏழையின் கேள்வி. இதற்கு அறிவியலின் பதில் என்ன?

Read more...

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?

Saturday, September 13, 2008

60 ஆயிரம் கோடி ரூபாயில் கடவுள் துகள் ஆராய்ச்சியாம். இதனால் மனத குலம் சாதிக்கப்போவது என்ன என்பது தான் எனக்கு விளங்கவில்லை.

கோயில்சிலை மீது குடம் குடமாய் பாலை ஊற்றினால் கேள்வி கேட்கிறோம். உலகில் பசியாலும் பட்டினியாலும் லட்சக்கணக்கான குழந்தைகள் கதறிக்கொண்டிருக்க சிலையில் மீது குடம் குடமாய் பாலை ஊற்றுவதா என்கிறோம்?

நியாயமான கேள்வி. அதே நேரத்தில கேள்வியை இப்படி மாற்றி கேட்டுப்பாருங்கள்.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா?

சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன?

கோடிகள் செலவிட்டு ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்ததார்கள். அதனால தானே இன்று இணையம், செல்பேசி, செயற்கைகோள், தொலைகாட்சி, விமானம் என சுகபோகங்களை அனுபவிக்கிறோம். புதிய ஆராய்ச்சிகள் இல்லாமல் இதெல்லாம் கிடைக்குமா? இப்படி சிலர் எதார்த்தமாக நினைக்கலாம்

ஆனால் உண்மை இது தானா?

உலக விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் சரித்திரத்தை கொஞ்சம் திருப்பி பாருங்கள். எல்லா கண்டுபிடிப்புகளும் எளிமையாக, மிகப்பெரிய தொகையில் ஆராய்ச்சி இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும்.

ஆனால் இன்று சர்வதேச கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை பணத்தை வீணாண ஆராய்ச்சியில் அழிக்கிறார்கள்? அதனால் இன்றுவரை கண்டுபிடித்துள்ள ஒரு பயனுள்ள புதுமையை சொல்ல சொல்லுங்கள்

சர்வதேச விண்வெளி மையமாம். ஆறுமாதத்திற்கு ஒரு முறை அங்கும் இங்கும் குடித்தனம் பெயர்கிறார்களாம். அங்கே விண்வெளியில் நடக்கிறார்களாம், மாரத்தான் ஓடுகிறார்களாம். நாமும் நம்புகிறோம். செயற்கைகோள், தொலைகாட்சி, இணையம் செல்பேசி என்ற பஞ்சுமிட்டாய்களை நமக்கு கொடுத்துவிட்டு அவர்களின் அத்தனை பித்தலாட்டங்களுக்கம் நம்மை தலையாட்ட வைக்கிறார்கள்.

இதில் விஷேசம் என்னவென்றால் நமக்கு கொடுத்தார்களே செயற்கைகோள், செல்பேசி போன்ற நவீனங்கள்., அது கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது தான். இதெல்லாம் சில விஞ்ஞானிகள் தங்கள் வறுமையை வென்று கண்டுபிடித்த படைப்புகள். எந்த உயரிய கண்டுபிடிப்புக்கும் உலகம் அவ்வளவு சீக்கிரம் பணத்தை தந்துவிடவில்லை. அதேபோல எந்த உயரிய விஞ்ஞானியையும் உயிரோடு இருக்கும்போது அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.

தகவல்தொழில் நுட்பம், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட துறைகளில் பல இளம் விஞ்ஞானிகள் பயனுள்ள் நவீன நுட்பங்களை கண்டுபிடித்தவண்ணம் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு நிதியுதவியோ, ஊக்குவிப்போ அளிக்க எந்த நாட்டு அரசும் தயாரில்லை. இவர்களை தனியார் வியாபார நிறுவனங்கள் தான் வியாபாரத்துக்காக ஊக்குவிக்கின்றன. அதுவும் கண்டுபிடிப்பு வியாபாரரீதியில் வெற்றியடைந்த பின்னரே நிதியுதவியும் அங்கீகாரமும் கிடைக்கிறது.

ஆனால் இன்று சர்வதேச விஞ்ஞான கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை கொள்ளை? பித்தலாட்டம்? சர்வதேச விஞ்ஞான அமைப்புகள் சாதித்ததாக குறைந்தபட்சம் ஒரு சாதனையை சொல்லமுடியுமா?

எதார்த்தவாதிகளே விரையமாவது யாரே உழைப்பும் பணமும் அல்ல. என்னுடைய, உங்களுடைய, என நம் ஒவ்வொருவரின் உழைப்பும் பணமும் தான்.

முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமே கடவுள் துகள் கண்டுபிடிப்பை ஆஹா, ஓகோ என்றுவிட்டார் என நாமும் அந்த ஆராய்ச்சியை அங்கீகரித்துவிடுகிறோம்.

ஆனால் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம் என்று யாரவது சொன்னால் அவன் கிடக்கிறான் பைத்தியகாரன் என கேலி செய்கிறோம்.

கொஞ்சம் யோசியுங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர்தேட செலவிடும் பணத்தை பூமியிலுள்ள நீரை சுத்தப்படுத்த, பாதுகாக்க செலவிட்டால் குடியா முழ்கிபோகும்?

சர்வதேச சுயநல அரசியல்வாதிகளும், போலி விஞ்ஞானிகளும் பிரமாண்ட ஆராய்ச்சி என்ற பெயரில் உலகை பகிரங்கமாக சுரண்டுகிறார்கள். நாமோ அவர்கள் சொல்லும் பிரமாண்டத்தை கேட்கவே வாய்பிழந்து காத்துகிடக்கிறோம்.

அதே நேரத்தில் நம்மில் ஒருவன் மனிதகுலத்துக்கு பயனுள்ள ஒன்றை கண்டுபிடிக்க முயற்சித்தாலே போதும் வாய்கிழிய கேள்விகேட்டே அவனை முடித்து கட்டுகிறோம்.

Read more...

மனவலி மரணவலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல் - 2)

Thursday, September 11, 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக...

(முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முதல் பாகம் படிக்க இங்கு சொடுக்குங்கள் வாழ்க்கை வலி (நான் யார் தேடல் - 1)

மன வலி (நான் யார் தேடல் - 2)

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் - ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்

உடலி வலித்தது
வீரிட்டு அழுதேன்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி

உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவளால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்கு பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்

ச்சே..
திக்கு தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை

வலியோடு
வாழ வெறுத்தவள்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்

ம்ம்ம்....
வாழ்வின் முடிவு -
அட அதுகூட
ஒரு வலிதான்.

வலிக்கு வலியே மருந்தா?

மருத்தது மனம்
மருந்து குடிக்க!

வலிக்கு வலியே மருந்தாகுமா?

ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்

ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?

அட
இது ஒரு புதுவலி

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- ஆன்ம வலி (நான் யார் தேடல் -3)

கவிதை விளக்கம்: மனம் ஏங்கும் பாசங்கள் கிடைக்காத போது மனம் உடைந்து விடுகிறது. வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. வாழ்க்கையை வெறுப்பவர்கள் கடைசியாக செல்லும் இடம் மரணவாசல். உண்மையில் மரணம் கூட ஒருவலிதான். மரணவாசலில் விபத்துநேரிடுபவர்கள் தான் மரணமடைகிறார்கள். ஒரு நிமிடம் மாற்றி சிந்திப்பவர்கள் மீண்டு வருகிறார்கள். தற்கொலைக்கு துணிந்த எனக்கு மரணவிளிம்பில் வந்த பயம் இது தான். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் இப்படி எல்லாம் சொல்கிறாரகளே இது எல்லாம் உண்மையா? ஒருவேளை நாம் மறித்த பின்னர் இதெல்லாம் தெரிந்து கொள்வோமா? அல்லது மீண்டும் இதே மனிதபிறவியாக வந்து தொலைப்போமா? விடைதேடிவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். அடுத்து அந்த விடைதேடும் பயணங்கள்...

ஏங்கிய பாசம் கிடைக்காமல், தாங்கமுடியாத அவமானம் தாங்காமல் தற்கொலை வரை செல்லும் அன்பர்களே., மரணவிளிம்பில் ஒரு நிமிடம் ஏக்கத்தையும் அவமானத்தையும் தவிர்த்து வேறு ஏதாவது சிந்தித்து பாருங்கள்., அந்த ஒருநிமிடம் உங்கள் தற்கொலை எண்ணங்களை மாற்றிவிடும். எதையும் சிந்திக்காமல் அதே ஏக்கம் அதே அவமானத்தையே சிந்திக்கும் போது தான் மரணம் உங்களை எளிதில் இழுத்துப்போட்டுவிடுகிறது.

Read more...

வாழ்க்கை வலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-1)

Tuesday, September 9, 2008

திரு. கோவி.கண்ணன் அவர்களின் காலம் வலைபதிவில் நான் கடவுள் பதிவை படித்ததும், எனக்குள் ஞானம் கிடைத்த வரலாறு நினைவுக்கு வந்தது.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக... இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை வலி (உடல் வலி)

வாழ்க்கை என்பது
அழுவதற்கு அல்ல - இந்த வரிகளுககு
இன்னும் புரியவில்லை அர்த்தம்

அழுகாமல் பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்

உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்

அப்போது கூட யோசித்திருப்பேனோ
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததா?

புது உலகுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்

உடலை வளைத்து
உணர்ச்சிகளை பெருக்கி
வாழ்க்கை பயணத்தை
வலி இன்றி தான் துவங்கியது மனம்.

சிந்தனை சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று

உணர்ச்சி தேடலின் வேகத்தில்
ஓட துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.

பற்று பாச பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் - அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.

பங்கிட்டு கிடைப்பது தான் பாசம்

பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.

உடன்பிறபபுகளின பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்

அயலவரின் பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்

பங்கிட்டு தான் பெற வேண்டுமா பாசத்தை?

யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!


தொடர்ச்சி அடுத்த பதிப்பில். (மனவலி)

கவிதை விளக்கம்: ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்ததும் அழவேண்டும். அப்படி அழவில்லை என்றால் குழந்தை உயிரோடு இல்லை என்பது மருத்துவர்கள் அறிந்ததே. காரணம் மூச்சுகுழாய்கள் விரிவடைந்து குழந்தை தானக சுவாகிக்க துவங்குகிறது. அப்போது ஏற்படும் உடல் வலிக்கு குழந்தை அழுகிறது. அப்படி அழவில்லை என்றால் அந்த குழந்தையின் உயிர் வாழ்க்கை அதோடு முடிந்துவிடும்.

உடல்வலி தாயின் அரவணைப்பில் சாந்தமாகும் போது குழந்தைக்கு தாயின் மீது பாசம்(பற்று) வருகிறது. தொடர்ந்து தன்னை அணைக்கும் ஒவ்வொருவர் மீதும் பாசம் வருகிறது. இந்த பாசத்தை குழந்தை நினைவில் பதிந்து கொள்கிறது. நளடைவில் தனக்கு கிடைத்த பாசங்கள் எல்லாம் குறைய துவங்கும் போது குழந்தைக்குள் மனம் கணக்கிறது. ஒருவித ஏக்கம் வருகிறது. அப்போது உடல்வலியோடு மனவலியும் வந்துவிடுகிறது.

குழந்தைகள் மட்டுமல்ல மனிதமனமே பொதுவாக ‘‘தான், தனக்கு மட்டும்’’ என்ற அளவில் தான் பாசத்தை எதிர்பார்க்கிறது. மேலும் தான் அசைப்படும் எல்லாமும் தனக்கு கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அங்கு மனம் வலிக்க ஆரம்பித்து விடுகிறது.

Read more...

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP